Read Bible
Free to use • No login or registration required • For all ages
Choose your language, version, book, and chapter below. You can optionally pick a single verse for a focused view. Then click Go to see the passage. Need help? See our How to use guide.
1. ஆபிரகாம் காலத்திலிருந்த பஞ்சத்தைவிட நாட்டில் இன்னுமொரு பஞ்சம் உண்டானது. அதனால் ஈசாக்கு கேராரிலுள்ள பெலிஸ்திய அரசனான அபிமெலேக்கிடம் போனான்.
2. அப்பொழுது யெகோவா ஈசாக்கிற்குத் தோன்றி, “நீ எகிப்திற்குப் போகவேண்டாம்; நான் உன்னைக் குடியிருக்கச் சொல்லும் நாட்டில் குடியிரு.
3. சிறிதுகாலம் இந்நாட்டில் தங்கியிரு, நான் உன்னுடன் இருந்து உன்னை ஆசீர்வதிப்பேன். இந்த நாடுகள் எல்லாவற்றையும் உனக்கும் உன் சந்ததிக்கும் தந்து, நான் உன் தகப்பன் ஆபிரகாமுக்கு ஆணையிட்டுக்கொடுத்த சத்தியத்தை உறுதிப்படுத்துவேன்.
4. நான் உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போல் பெருகப்பண்ணி, இந்நாடுகள் எல்லாவற்றையும் அவர்களுக்குக் கொடுப்பேன். உன் சந்ததியின் மூலமாக பூமியில் உள்ள எல்லா நாடுகளும் ஆசீர்வதிக்கப்படும்.
5. ஏனெனில், ஆபிரகாம் எனக்குக் கீழ்ப்படிந்து, நான் ஒப்படைத்தவற்றையும், கட்டளைகளையும், விதிமுறைகளையும், சட்ட விதிகளையும் நிறைவேற்றினான்” என்றார்.
6. இதனால் ஈசாக்கு கேராரிலே தங்கியிருந்தான்.
7. அவ்விடத்து மனிதர் அவனுடைய மனைவியைப் பற்றி யாரென்று விசாரித்தபோது, அவளைத், “தன் மனைவி” என்று சொல்லப் பயந்ததினால், “தன் சகோதரி” என்று சொன்னான். ஏனெனில், “ரெபெக்காள் மிகவும் அழகுள்ளவளாய் இருந்தபடியால், அவ்விடத்து மனிதர் அவளை அபகரிப்பதற்காகத் தன்னைக் கொன்றுவிடுவார்கள்” என்று அவன் நினைத்தான்.
8. ஈசாக்கு நீண்டநாட்களாய் அங்கே குடியிருக்கையில், பெலிஸ்திய அரசன் அபிமெலேக்கு ஒரு நாள் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, ஈசாக்கு தன் மனைவி ரெபெக்காளோடே தழுவிக் கொண்டிருப்பதைக் கண்டான்.
9. அப்பொழுது அபிமெலேக்கு ஈசாக்கைக் கூப்பிட்டு அவனிடம், “உண்மையிலேயே அவள் உன்னுடைய மனைவி! அப்படியிருக்க, அவள் உன் சகோதரியென்று நீ ஏன் சொன்னாய்?” என்று கேட்டான். அதற்கு ஈசாக்கு, “அவளின் நிமித்தம் நான் என் உயிரை இழந்துவிடுவேன் என்று நினைத்தபடியால் அப்படிச் சொன்னேன்” என்றான்.
10. அதற்கு அபிமெலேக்கு ஈசாக்கிடம், “நீ எங்களுக்குச் செய்திருப்பது என்ன? எங்கள் மனிதரில் யாராவது ஒருவன் உன் மனைவியுடன் உறவுகொண்டிருந்தால், நீ எங்கள்மேல் குற்றத்தைக் கொண்டுவந்திருப்பாயே” என்றான்.
11. பின்பு அபிமெலேக்கு எல்லா மனிதருக்கும் சொன்னதாவது: “இந்த மனிதனையோ அல்லது இவன் மனைவியையோ தொந்தரவு செய்யும் எவனும், நிச்சயமாகக் கொல்லப்படுவான்” என உத்தரவிட்டான்.
12. ஈசாக்கு அந்த நிலத்தில் பயிரிட்டான், யெகோவா அவனை ஆசீர்வதித்தபடியால், அதே வருடத்தில் அவன் நூறுமடங்கு அறுவடை செய்தான்.
13. அவன் பணக்காரன் ஆனான், அவன் மிகவும் செல்வந்தனாகும்வரை அவனுடைய செல்வம் தொடர்ந்து பெருகியது.
14. அவனுக்கு அநேக ஆட்டு மந்தைகளும், மாட்டு மந்தைகளும், அநேக வேலைக்காரரும் இருந்தார்கள். அதனால் பெலிஸ்தியர் அவன்மேல் பொறாமை கொண்டார்கள்.
15. அவனுடைய தகப்பனான ஆபிரகாமின் காலத்தில் அவனுடைய வேலைக்காரர் வெட்டிய கிணறுகளையெல்லாம், பெலிஸ்தியர் மண்ணைப்போட்டு மூடினார்கள்.
16. எனவே அபிமெலேக்கு ஈசாக்கிடம், “நீ இவ்விடத்தைவிட்டுப் போய்விடு; நீ எங்களைவிட மிகவும் வல்லமையுள்ளவனாகி விட்டாய்” என்றான்.
17. ஆகவே, ஈசாக்கு அவ்விடத்தைவிட்டு அகன்று, கேராரின் பள்ளத்தாக்குக்குப் போய், அங்கே கூடாரம்போட்டுத் தங்கினான்.
18. தன் தகப்பன் ஆபிரகாமின் காலத்தில் வெட்டப்பட்டு, ஆபிரகாம் இறந்தபின் பெலிஸ்தியரினால் மூடப்பட்டிருந்த கிணறுகளை ஈசாக்கு மீண்டும் தோண்டினான். அவற்றிற்குத் தன் தகப்பன் கொடுத்திருந்த அதே பெயர்களையே இட்டான்.
19. ஈசாக்கின் வேலைக்காரர் அந்தப் பள்ளத்தாக்கிலே கிணற்றைத் தோண்டிய போது, அங்கே புதிய நன்னீர் ஊற்றைக் கண்டார்கள்.
20. ஆனால், கேராரின் மேய்ப்பர்கள், “அந்த நீரூற்று தங்களுடையது என்று சொல்லி ஈசாக்கின் மேய்ப்பருடன் வாக்குவாதம் செய்தார்கள். அவர்கள் தன்னோடு வாக்குவாதம் செய்தபடியால், ஈசாக்கு அக்கிணற்றுக்கு ஏசேக்கு எனப் பெயரிட்டான்.”
21. அதற்குப்பின் வேறொரு கிணற்றைத் தோண்டினார்கள். அதைக் குறித்தும் அவர்கள் வாக்குவாதம் பண்ணினார்கள். அதனால் அவன் அதற்கு சித்னா என்று பெயரிட்டான்.
22. பின் அவன் அவ்விடம் விட்டு வேறு இடத்திற்குப் போய், அங்கேயும் ஒரு கிணறு தோண்டினான். அதைக்குறித்து ஒருவரும் வாக்குவாதம் செய்யவில்லை. அப்பொழுது ஈசாக்கு, “யெகோவா எனக்கு இப்பொழுது ஒரு இடத்தைக் கொடுத்திருக்கிறார், இந்த நிலத்திலே நாம் செழித்து வாழ்வோம்” என்று சொல்லி அந்த இடத்திற்கு ரெகொபோத் என்று பெயரிட்டான்.
23. அவன் அங்கிருந்து பெயெர்செபாவுக்குப் போனான்.
24. அன்று இரவு யெகோவா ஈசாக்கிற்குத் தோன்றி, “நான் உன் தகப்பன் ஆபிரகாமின் இறைவன்; நீ பயப்படாதே, நான் உன்னுடனேகூட இருக்கிறேன். நான் என் பணியாளன் ஆபிரகாமின் நிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன்” என்றார்.
25. அங்கே ஈசாக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, யெகோவாவின் பெயரைக் கூப்பிட்டு அவரை வழிபட்டான். அங்கே தனக்கு ஒரு கூடாரத்தையும் அமைத்தான், அவனுடைய வேலைக்காரர் அவ்விடத்தில் ஒரு கிணற்றையும் தோண்டினார்கள்.
26. அக்காலத்தில் அபிமெலேக்கு தன் ஆலோசகன் அகுசாத்துடனும், தன் படைத்தளபதி பிகோலுடனும் கேராரிலிருந்து ஈசாக்கிடம் வந்தான்.
27. ஈசாக்கு அவர்களிடம், “என்னுடன் பகைமை பாராட்டி, என்னை வெளியே துரத்தி விட்டீர்களே, இப்பொழுது ஏன் என்னிடம் வந்தீர்கள்?” என்று கேட்டான்.
28. அதற்கு அவர்கள், “யெகோவா உம்மோடு இருக்கிறார் என்பதை நாங்கள் தெளிவாகக் காண்கிறோம்; ‘எனவே, நமக்கிடையில் சத்தியம் செய்யப்பட்ட ஒரு ஒப்பந்தம் இருக்கட்டும்.’ நாங்கள் உம்முடன் ஒரு உடன்படிக்கை செய்துகொள்வோம்.
29. அதாவது, நாங்கள் உம்மைத் தொந்தரவு செய்யாமல், எப்பொழுதும் உம்மை நன்றாக நடத்தி, சமாதானத்தோடே அனுப்பியதுபோல், நீரும் எங்களுக்கு ஒரு தீமையும் செய்யாது இருப்பீர் என்று ஆணையிட்டுக் கொள்வோம். நீர் இப்பொழுது யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறீர்” என்றார்கள்.
30. பின்பு ஈசாக்கு அவர்களுக்கு ஒரு விருந்து கொடுத்தான். அவ்விருந்தில் அவர்களெல்லாரும் சாப்பிட்டு, குடித்தார்கள்.
31. மறுநாள் அதிகாலை எழுந்து, ஒருவரோடொருவர் ஆணையிட்டு சபதம் செய்துகொண்டார்கள். ஈசாக்கு அவர்களை வழியனுப்பினான், அவர்கள் சமாதானத்துடன் அவனைவிட்டுப் புறப்பட்டார்கள்.
32. அந்த நாளில், ஈசாக்கின் வேலைக்காரர் வந்து, தாங்கள் தோண்டிய கிணற்றைப்பற்றி அவனிடம் சொன்னார்கள். அவர்கள் அவனிடம், “நாங்கள் தண்ணீரைக் கண்டோம்!” என்றார்கள்.
33. அவன் அக்கிணற்றிற்கு சிபா என்று பெயரிட்டான். இன்றுவரை அப்பட்டணம் பெயெர்செபா என்றே அழைக்கப்படுகிறது.
34. ஏசாவுக்கு நாற்பது வயதானபோது ஏத்தியனான பெயேரியினுடைய மகள் யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனின் மகள் பஸ்மாத்தையும் திருமணம் செய்துகொண்டான்.
35. அவர்கள் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனவேதனையை உண்டாக்குகிறவர்களாய் இருந்தார்கள்.