Read Bible

Free to use • No login or registration required • For all ages

Choose your language, version, book, and chapter below. You can optionally pick a single verse for a focused view. Then click Go to see the passage. Need help? See our How to use guide.

Genesis 17

1. ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதாயிருந்தபோது, யெகோவா அவனுக்குத் தோன்றி, “நான் எல்லாம் வல்ல இறைவன்; நீ எனக்கு முன்பாக உண்மையாய் நடந்து குற்றமற்றவனாய் இரு.

2. நான் உனக்கும் எனக்கும் இடையில் என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, மேலும் உறுதிப்படுத்துவேன், உன்னை மிகவும் பெருகப்பண்ணுவேன்” என்றார்.

3. ஆபிராம் முகங்குப்புற விழுந்தான், இறைவன் அவனுடன் பேசி,

4. “என்னைப் பொறுத்தமட்டில் நான் உன்னுடன் செய்யும் உடன்படிக்கை இதுவே: நீ பல நாடுகளுக்குத் தகப்பனாவாய்.

5. நான் உன்னை அநேக நாடுகளுக்குத் தகப்பனாக்கியிருப்பதால், இனி நீ ஆபிராம் என்று அழைக்கப்படாமல், ஆபிரகாம் என்றே அழைக்கப்படுவாய்.

6. நான் உன்னை மிகவும் இனவிருத்தி உள்ளவனாக்குவேன்; உன்னிலிருந்து பல நாடுகளை உருவாக்குவேன், அரசர்கள் உன்னிலிருந்து தோன்றுவார்கள்.

7. நான் உன் இறைவனாகவும் உனக்குப்பின் உன் சந்ததிகளுடைய இறைவனாகவும் இருப்பேன்; இந்த என் உடன்படிக்கையை, எனக்கும் உனக்கும் இடையில் ஒரு நித்திய உடன்படிக்கையாக உன்னுடனும் உனக்குப்பின் தலைமுறைதோறும் உன் சந்ததிகளுடனும் ஏற்படுத்துவேன்.

8. நீ இப்பொழுது அந்நியனாய் வாழும் இந்தக் கானான் நாடு முழுவதையும், உனக்கும் உனக்குப்பின் உன் சந்ததிகளுக்கும் ஒரு நித்திய உடைமையாகக் கொடுப்பேன்; நானே அவர்களுக்கு இறைவனாய் இருப்பேன்” என்றார்.

9. அதன்பின் இறைவன் ஆபிரகாமிடம், “உன்னைப் பொறுத்தமட்டில், என் உடன்படிக்கையை நீயும் உனக்குப்பின் உன் சந்ததியும் தலைமுறை தலைமுறையாக அதைக் கடைபிடிக்க வேண்டும்.

10. நான் உன்னோடும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிகளோடும் செய்துகொள்ளும் என் உடன்படிக்கையில் நீங்கள் கைக்கொள்ளவேண்டிய பங்காவது: உங்கள் மத்தியில் உள்ள ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும்.

11. நீயும் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும், அது எனக்கும் உனக்கும் இடையிலான உடன்படிக்கையின் அடையாளமாயிருக்கும்.

12. தலைமுறைதோறும், ஒவ்வொரு ஆண் குழந்தைக்கும் பிறந்து எட்டாவது நாள் விருத்தசேதனம் செய்யப்படவேண்டும். உங்கள் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கும், உங்கள் சந்ததியாய் இராமல், அந்நியரிடமிருந்து பணத்துக்கு வாங்கப்பட்டவர்களுக்கும் விருத்தசேதனம் செய்யப்படவேண்டும்.

13. அவர்கள் உன் குடும்பத்தில் பிறந்தவர்களாய் இருந்தாலென்ன, பணத்திற்கு வாங்கப்பட்டவர்களாய் இருந்தாலென்ன, அவர்களுக்கும் கட்டாயம் விருத்தசேதனம் செய்யவேண்டும். இவ்வாறு இது உங்கள் உடலில் என் நித்திய உடன்படிக்கையின் அடையாளமாக இருக்கும்.

14. எந்த ஆணுக்கும் தன் உடலில் நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படாதிருந்தால், அவன் தன் சொந்த மக்களிலிருந்து விலக்கப்படுவான்; ஏனெனில், அவன் என் உடன்படிக்கையை நிராகரித்துவிட்டான்” என்றார்.

15. மேலும் இறைவன் ஆபிரகாமிடம், “உன் மனைவி சாராயை இனிமேல் நீ சாராய் என்று அழைக்கவேண்டாம்; சாராள் என்பதே அவள் பெயராகும்.

16. நான் அவளை ஆசீர்வதித்து, நிச்சயமாக அவள் மூலம் உனக்கு ஒரு மகனைக் கொடுப்பேன். நான் அவளை ஆசீர்வதிப்பதனால், அவள் நாடுகளுக்குத் தாயாவாள்; மக்கள் கூட்டங்களின் அரசர்களும் அவளிலிருந்து தோன்றுவார்கள்” என்றார்.

17. அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து சிரித்து, “நூறு வயதுள்ள மனிதனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதில் சாராள் பிள்ளை பெறுவாளோ?” என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.

18. மேலும் ஆபிரகாம் இறைவனிடம், “இஸ்மயேல் உம்முடைய ஆசீர்வாதத்தில் வாழ்ந்தாலே போதும்!” என்று சொன்னான்.

19. அதற்கு இறைவன், “ஆம்; ஆனாலும், சாராள் உனக்கு ஒரு மகனைப் பெறுவாள்; நீ அவனுக்கு ஈசாக்கு என்று பெயரிடு. என் உடன்படிக்கையை நான் அவனுடன் ஏற்படுத்துவேன்; அது அவனுக்குப்பின் அவனுடைய சந்ததிகளுக்கு ஒரு நித்திய உடன்படிக்கையாக இருக்கும்.

20. இஸ்மயேலைப் பொறுத்தமட்டில், நான் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்: நான் அவனை நிச்சயமாக ஆசீர்வதிப்பேன்; நான் அவனை இனவிருத்தி உள்ளவனாக்கி, அவனுடைய சந்ததியையும் பலுகிப் பெருகப்பண்ணுவேன். அவன் பன்னிரண்டு ஆளுநர்களுக்குத் தகப்பனாயிருப்பான், நான் அவனை ஒரு பெரிய நாடாக்குவேன்.

21. ஆனால், அடுத்த வருடம் இதே காலத்தில், சாராள் உனக்குப் பெறப்போகும் ஈசாக்குடனேயே என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்” என்றார்.

22. இறைவன் ஆபிரகாமுடன் பேசி முடித்தபின் மேலெழுந்து போனார்.

23. ஆபிரகாம், இறைவன் தனக்குச் சொன்னபடி அந்த நாளிலேயே, இஸ்மயேலுக்கும், தன் வீட்டில் பிறந்தவர்களும், பணத்திற்கு வாங்கப்பட்டவர்களுமான தன் வீட்டிலுள்ள எல்லா ஆண்களுக்கும் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம் செய்தான்.

24. ஆபிரகாமுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படும்போது அவன் தொண்ணூற்றொன்பது வயதுடையவனாய் இருந்தான்.

25. அவனுடைய மகன் இஸ்மயேலுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படும்போது அவன் பதின்மூன்று வயதுடையவனாய் இருந்தான்;

26. ஆபிரகாமும் அவன் மகன் இஸ்மயேலும் ஒரே நாளில் விருத்தசேதனம் செய்யப்பட்டார்கள்.

27. ஆபிரகாமின் வீட்டில் பிறந்தவர்களும், அவனால் பணங்கொடுத்து அந்நியரிடம் வாங்கப்பட்டவர்களுமான அவனுடைய குடும்பத்தைச் சேர்ந்த எல்லா ஆண்களும் ஆபிரகாமுடன் விருத்தசேதனம் செய்யப்பட்டார்கள்.