Read Bible

Free to use • No login or registration required • For all ages

Choose your language, version, book, and chapter below. You can optionally pick a single verse for a focused view. Then click Go to see the passage. Need help? See our How to use guide.

1 Samuel 26

1. பின்பு சீப் ஊர்க்காரர்கள் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எஷிமோனுக்கு எதிரான ஆகிலாமேட்டில் ஒளிந்துகொண்டிருக்கிறான் என்றார்கள்.

2. அப்பொழுது சவுல்: சீப் வனாந்திரத்திலே தாவீதைத் தேடும்படி எழுந்து, இஸ்ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம்பேரோடு, சீப் வனாந்திரத்திற்குப் புறப்பட்டுப்போனான்.

3. சவுல் எஷிமோனுக்கு எதிரே வழியருகே இருக்கிற ஆகிலாமேட்டிலே முகாமிட்டான்; தாவீது வனாந்திரத்தில் தங்கி, சவுல் தன்னைத் தொடர்ந்து வனாந்திரத்திற்கு வருகிறதைக் கண்டு,

4. தாவீது வேவுகாரரை அனுப்பி, சவுல் வந்தது நிச்சயம் என்று அறிந்துகொண்டான்.

5. பின்பு தாவீது எழுந்து, சவுல் முகாமிட்ட இடத்திற்குப் போய், சவுலும் நேரின் மகனான அப்னேர் என்னும் அவனுடைய படைத்தலைவனும் படுத்துக்கொண்டிருக்கிற இடத்தைப் பார்த்தான்; சவுல் இரதங்களிருக்கிற இடத்திலே படுத்துக்கொண்டிருந்தான்; மக்கள் அவனைச் சுற்றிலும் முகாமிட்டிருந்தார்கள்.

6. தாவீது ஏத்தியனான அகிமெலேக்கையும், செருயாவின் மகனும் யோவாபின் சகோதரனுமாகிய அபிசாயையும் பார்த்து: என்னோடு சவுலின் முகாமிற்கு இறங்கிவருகிறவன் யார் என்றதற்கு, அபிசாய்: நான் உம்மோடு வருகிறேன் என்றான்.

7. அப்படியே தாவீதும் அபிசாயும் இரவிலே அந்த ஜனங்களுக்குள்ளே வந்தார்கள்; இதோ, சவுல் இரதங்களிருக்கிற இடத்திலே படுத்து தூங்கிக்கொண்டிருந்தான்; அவனுடைய தலைமாட்டில் அவனுடைய ஈட்டி நிலத்திலே குத்தியிருந்தது; அவனைச் சுற்றிலும் அப்னேரும் மக்களும் படுத்திருந்தார்கள்.

8. அப்பொழுது அபிசாய் தாவீதைப் பார்த்து: இன்று தேவன் உம்முடைய எதிரியை உம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்போதும் நான் அவனை ஈட்டியினால் இரண்டு குத்தாகக் குத்தாமல், ஒரே குத்தாக நிலத்தில் பாயக் குத்தட்டுமா என்றான்.

9. தாவீது அபிசாயைப் பார்த்து: அவரைக் கொல்லாதே; யெகோவா அபிஷேகம்செய்தவர்மேல் தன்னுடைய கையைப் போட்டு, குற்றமில்லாமல் போகிறவன் யார்? என்று சொன்னான்.

10. பின்னும் தாவீது: யெகோவா அவரை அடித்து, அல்லது அவருடைய காலம் வந்து, அவர் மரித்து, அல்லது அவர் யுத்தத்திற்குப் போய் இறந்தாலொழிய,

11. நான் என்னுடைய கையைக் யெகோவா அபிஷேகம்செய்தவர்மேல் போடாதபடி, யெகோவா என்னைக் காப்பாராக என்று யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்கிறேன்; இப்போதும் அவர் தலைமாட்டில் இருக்கிற ஈட்டியையும், தண்ணீர்ச்செம்பையும் எடுத்துக்கொண்டு போவோம் என்றான்.

12. தாவீது சவுலின் தலைமாட்டில் இருந்த ஈட்டியையும், தண்ணீர்ச்செம்பையும் எடுத்துக்கொண்டபின்பு, புறப்பட்டுப்போனார்கள்; அதை ஒருவரும் காணவில்லை, அறியவுமில்லை, ஒருவரும் விழித்துக்கொள்ளவுமில்லை; யெகோவா அவர்களுக்கு அயர்ந்த தூக்கத்தை வரச்செய்ததால், அவர்கள் எல்லாரும் தூங்கினார்கள்.

13. தாவீது கடந்து, அந்தப் பக்கத்திற்குப் போய், தங்களுக்கும் அவர்களுக்கும் நடுவே போதிய இடைவெளி உண்டாக, தூரத்திலிருக்கிற மலையின் உச்சியிலே,

14. மக்களுக்கும் நேரின் மகனான அப்னேருக்கும் நேராக நின்று கூப்பிட்டு: அப்னேரே, பதில் சொல்லமாட்டீரா என்றான்; அதற்கு அப்னேர்: ராஜாவுக்கு நேராகக் கூக்குரலிடுகிற நீ யார் என்றான்.

15. அப்பொழுது தாவீது அப்னேரை நோக்கி: நீர் வீரன் அல்லவா? இஸ்ரவேலில் உமக்குச் சரியானவன் யார்? பின்னே நீர் உம்முடைய ஆண்டவனாகிய ராஜாவைக் காக்காமல் போனதென்ன? மக்களில் ஒருவன் உம்முடைய ஆண்டவனாகிய ராஜாவைக் கொல்லும்படி வந்திருந்தானே.

16. நீர் செய்த இந்தக் காரியம் நல்லதல்ல; யெகோவா அபிஷேகம்செய்த உங்கள் ஆண்டவனை நீங்கள் காக்காமல் போனபடியால், நீங்கள் மரணத்திற்கு ஏதுவானவர்கள்; இப்போதும் ராஜாவின் தலைமாட்டில் இருந்த அவருடைய ஈட்டியும் தண்ணீர்ச்செம்பும் எங்கே என்று பாரும் என்றான்.

17. அப்பொழுது சவுல்: தாவீதின் சத்தத்தை அறிந்து, என்னுடைய மகனான தாவீதே, இது உன்னுடைய சத்தமல்லவா என்றான். அதற்குத் தாவீது: ராஜாவாகிய என்னுடைய ஆண்டவனே, இது என்னுடைய சத்தந்தான் என்று சொல்லி,

18. பின்னும்: என்னுடைய ஆண்டவனாகிய நீர் உம்முடைய அடியானை இப்படிப் பின் தொடருகிறது என்ன? நான் என்ன செய்தேன்? என்னிடத்தில் என்ன தீங்கு இருக்கிறது?

19. இப்பொழுது ராஜாவாகிய என்னுடைய ஆண்டவன் தம்முடைய அடியானுடைய வார்த்தைகளைக் கேட்பாராக; யெகோவா உம்மை எனக்கு விரோதமாக தூண்டிவிட்டது உண்டானால், அதற்கு அவர் காணிக்கையை ஏற்றுக்கொள்வாராக; மனிதர்கள் அதைச் செய்தார்களென்றால், அவர்கள் யெகோவாவுக்கு முன்பாகச் சபிக்கப்பட்டவர்கள்; அவர்கள்: நீ போய்; அந்நிய தேவர்களைத் தொழுதுகொள் என்று சொல்லி, அவர்கள் இன்று என்னைக் யெகோவாவுடைய சுதந்தரத்தில் சேரமுடியாதபடி துரத்திவிட்டார்களே.

20. இப்போதும் யெகோவாவுடைய சமுகத்தில் என்னுடைய இரத்தம் தரையில் விழாதிருப்பதாக; மலைகளில் ஒரு கவுதாரியை வேட்டையாடுவதுபோல, இஸ்ரவேலின் ராஜா ஒரு தெள்ளுப்பூச்சியைத் தேடவந்தாரோ என்றான்.

21. அப்பொழுது சவுல்: நான் பாவம் செய்தேன்; என்னுடைய மகனான தாவீதே, திரும்பி வா; என்னுடைய ஜீவன் இன்றையதினம் உன்னுடைய பார்வைக்கு அருமையாக இருந்தபடியால், இனி உனக்கு ஒரு தீங்கும் செய்யமாட்டேன்; இதோ, நான் மதியற்றவனாய் மகா பெரிய தவறு செய்தேன் என்றான்.

22. அதற்குத் தாவீது: இதோ, ராஜாவின் ஈட்டி இங்கே இருக்கிறது; வாலிபர்களில் ஒருவன் இந்த இடத்திற்கு வந்து, அதை வாங்கிக்கொண்டு போகட்டும்.

23. யெகோவா அவனவனுக்கு அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் தகுந்த பலன் அளிப்பாராக; இன்று யெகோவா உம்மை என் கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், யெகோவா அபிஷேகம்செய்தவர்மேல், என்னுடைய கையை நீட்ட மனதில்லாதிருந்தேன்.

24. இதோ, உம்முடைய ஜீவன் இன்றையதினம் என்னுடைய பார்வைக்கு எப்படி அருமையாக இருந்ததோ, அப்படியே என்னுடைய ஜீவனும் யெகோவாவின் பார்வைக்கு அருமையாக இருப்பதால், அவர் என்னை எல்லா உபத்திரவத்திற்கும் விடுவிப்பாராக என்றான்.

25. அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி: என்னுடைய மகனான தாவீதே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்; நீ பெரிய காரியங்களைச் செய்வாய், மேன்மேலும் பெலப்படுவாய் என்றான்; அப்படியே தாவீது தன் வழியில் போனான்; சவுலும் தன்னுடைய இடத்திற்கு திரும்பினான்.