Read Bible
Free to use • No login or registration required • For all ages
Choose your language, version, book, and chapter below. You can optionally pick a single verse for a focused view. Then click Go to see the passage. Need help? See our How to use guide.
1. சவுல் பெலிஸ்தர்களைப் பின்தொடர்வதைவிட்டுத் திரும்பி வந்தபோது, இதோ, தாவீது என்கேதியின் வனாந்திரத்தில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது.
2. அப்பொழுது சவுல்: இஸ்ரவேல் அனைத்திலும் தெரிந்துகொள்ளப்பட்ட 3,000 பேரைக் கூட்டிக்கொண்டு, தாவீதையும் அவனுடைய மனிதர்களையும் வரையாடுகளுள்ள கன்மலைகளின்மேல் தேடப்போனான்.
3. வழியோரத்திலிருக்கிற ஆட்டுத்தொழுவங்களிடத்தில் அவன் வந்தபோது, அங்கே ஒரு குகை இருந்தது; அதிலே சவுல் காலைக்கடன் கழிக்கப்போனான்; தாவீதும் அவனுடைய மனிதர்களும் அந்தக் குகையின் பக்கங்களில் உட்கார்ந்திருந்தார்கள்.
4. அப்பொழுது தாவீதின் மனிதர்கள் அவனை நோக்கி: இதோ, நான் உன்னுடைய எதிரியை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன்; உன்னுடைய பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்வாயாக என்று யெகோவா உன்னோடு சொன்ன நாள் இதுவே என்றார்கள்; தாவீது எழுந்துபோய், சவுலுடைய சால்வையின் தொங்கலை மெதுவாக அறுத்துக்கொண்டான்.
5. தாவீது சவுலின் சால்வைத் தொங்கலை அறுத்துக்கொண்டதினால் அவனுடைய மனது அடித்துக்கொண்டிருந்தது.
6. அவன் தன்னுடைய மனிதர்களைப் பார்த்து: யெகோவா அபிஷேகம்செய்த என்னுடைய ஆண்டவன்மேல் என்னுடைய கையைப் போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடி, யெகோவா என்னைக் காப்பாராக; அவர் யெகோவாவால் அபிஷேகம்செய்யப்பட்டவர் என்று சொல்லி,
7. தன்னுடைய மனிதர்களை சவுலின்மேல் எழும்ப விடாமல், இவ்வார்த்தைகளினால் அவர்களைத் தடை செய்தான்; சவுல் எழுந்து, குகையைவிட்டு, வழியே நடந்து போனான்.
8. அப்பொழுது தாவீதும் எழுந்து, கெபியிலிருந்து புறப்பட்டு, சவுலுக்குப் பின்னாகப் போய்: ராஜாவாகிய என் ஆண்டவனே என்று கூப்பிட்டான்; சவுல் திரும்பிப்பார்த்தபோது, தாவீது தரை வரை முகங்குனிந்து வணங்கி,
9. சவுலை நோக்கி: தாவீது உமக்கு தீங்கு செய்யப்பார்க்கிறான் என்று சொல்லுகிற மனிதர்களுடைய வார்த்தைகளை ஏன் கேட்கிறீர்?
10. இதோ, யெகோவா இன்று குகையில் உம்மை என்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தார் என்பதை இன்றையதினம் உம்முடைய கண்கள் கண்டதே, உம்மைக் கொன்றுபோடவேண்டும் என்று சிலர் சொன்னார்கள்; ஆனாலும் என்னுடைய கை உம்மைத் தப்பவிட்டது; என்னுடைய ஆண்டவன்மேல் என்னுடைய கையைப் போடேன்; அவர் யெகோவாவால் அபிஷேகம்செய்யப்பட்டவராமே என்றேன்.
11. என்னுடைய தகப்பனே பாரும்; என்னுடைய கையிலிருக்கிற உம்முடைய சால்வையின் தொங்கலைப் பாரும்; உம்மைக் கொன்று போடாமல், உம்முடைய சால்வையின் தொங்கலை அறுத்துக்கொண்டேன்; என்னுடைய கையிலே தீங்கும் துரோகமும் இல்லை என்றும், உமக்கு நான் குற்றம் செய்யவில்லை என்றும் அறிந்துகொள்ளும்; நீரோ என்னுடைய உயிரை வாங்க, அதை வேட்டையாடுகிறீர்.
12. யெகோவா எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயம் விசாரித்து, யெகோவா தாமே என்னுடைய காரியத்தில் உமக்கு நீதியைச் சரிக்கட்டுவாராக; என்னுடைய கை உமக்கு விரோதமாக இருக்காது.
13. முதியோர் வாக்கின்படியே, தீயோரிடமிருந்து தீமை பிறக்கும்; எனவே, என்னுடைய கை உமக்கு விரோதமாக இருக்காது.
14. இஸ்ரவேலின் ராஜா யாரைத் தேடப் புறப்பட்டார்? ஒரு செத்த நாயையா, ஒரு தெள்ளுப்பூச்சியையா, நீர் யாரைப் பின்தொடருகிறீர்?
15. யெகோவா நியாயாதிபதியாயிருந்து, எனக்கும் உமக்கும் நியாயந்தீர்த்து, எனக்காக வாதாடி, நான் உம்முடைய கைக்குத் தப்ப என்னை விடுவிப்பாராக என்றான்.
16. தாவீது இந்த வார்த்தைகளைச் சவுலோடே சொல்லி முடிந்தபின்பு, சவுல்: என்னுடைய மகனான தாவீதே, இது உன்னுடைய சத்தமல்லவா என்று சொல்லி, சத்தமிட்டு அழுது,
17. தாவீதைப் பார்த்து: நீ என்னைவிட நீதிமான்; நீ எனக்கு நன்மை செய்தாய்; நானோ உனக்கு தீமை செய்தேன்.
18. நீ எனக்கு நன்மை செய்ததை இன்று விளங்கச்செய்தாய்; யெகோவா என்னை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், நீ என்னைக் கொன்று போடவில்லை.
19. ஒருவன் தன்னுடைய எதிரியைக் கண்டுபிடித்தால், அவனைச் சுகமாக போகவிடுவானோ? இன்று நீ எனக்குச் செய்த நன்மைக்காகக் யெகோவா உனக்கு நன்மை செய்வாராக.
20. நீ நிச்சயமாக ராஜாவாக இருப்பாய் என்றும், இஸ்ரவேலின் ராஜ்ஜியம் உன்னுடைய கையில் நிலைக்கும் என்றும் அறிவேன்.
21. இப்போதும் நீ எனக்குப் பின்னிருக்கும் என்னுடைய சந்ததியை வேரறுப்பதில்லை என்றும், என்னுடைய தகப்பன் வீட்டாரில் என்னுடைய பெயரை அழித்துப்போடுவதில்லை என்றும் யெகோவாமேல் எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்.
22. அப்பொழுது தாவீது சவுலுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான்; பின்பு, சவுல் தன்னுடைய வீட்டுக்குப் புறப்பட்டுப்போனான்; தாவீதும் அவனுடைய மனிதர்களும் பாதுகாப்பான இடத்திற்கு ஏறிப்போனார்கள்.