Read Bible

Free to use • No login or registration required • For all ages

Choose your language, version, book, and chapter below. You can optionally pick a single verse for a focused view. Then click Go to see the passage. Need help? See our How to use guide.

1 Samuel 22

1. தாவீது அந்த இடத்தைவிட்டுத் தப்பி, அதுல்லாம் என்னும் குகைக்குப் போனான்; அதை அவன் சகோதரர்களும் அவன் தகப்பன் வீட்டார்கள் அனைவரும் கேட்டு, அங்கே அவனிடத்திற்குப் போனார்கள்.

2. ஒடுக்கப்பட்டவர்கள், கடன்பட்டவர்கள், முறுமுறுக்கிறவர்கள் யாவரும் அவனோடு கூடிக்கொண்டார்கள்; அவன் அவர்களுக்குத் தலைவனானான்; இந்தப் படியாக ஏறக்குறைய 400 பேர் அவனோடு இருந்தார்கள்.

3. தாவீது அந்த இடத்தைவிட்டு மோவாபியர்களைச் சேர்ந்த மிஸ்பேக்குப் போய், மோவாபின் ராஜாவைப் பார்த்து: தேவன் என்னை எப்படி நடத்துவார் என்று நான் அறியும் வரை, என்னுடைய தகப்பனும் என்னுடைய தாயும் உங்களிடத்திலே தங்கியிருக்கும்படி தயை செய்யும் என்று சொல்லி,

4. அவர்களை மோவாபின் ராஜாவிடத்தில் அழைத்துக்கொண்டு போய்விட்டான்; தாவீது கோட்டையில் இருந்த நாளெல்லாம் அவர்கள் அங்கே அவனோடிருந்தார்கள்.

5. பின்பு காத் என்னும் தீர்க்கதரிசி தாவீதைப் பார்த்து: நீர் கோட்டையில் இருக்காமல் யூதா தேசத்திற்குப் புறப்பட்டு வாரும் என்றான்; அப்பொழுது தாவீது புறப்பட்டு ஆரேத் என்னும் காட்டிற்கு போனான்.

6. தாவீதும் அவனோடிருந்த மனிதர்களும் காணப்பட்ட செய்தியை சவுல் கேள்விப்பட்டான்; சவுல் கிபியாவைச் சேர்ந்த ராமாவில் ஒரு தோப்பிலே உட்கார்ந்து, தன்னுடைய ஊழியக்காரர்கள் எல்லோரும் தன்னைச் சூழ்ந்து நிற்க, தன் ஈட்டியைத் தன் கையிலே பிடித்துக்கொண்டிருக்கும்போது,

7. சவுல் தன்னுடைய அருகில் நிற்கிற தன் ஊழியக்காரர்களைப் பார்த்து: பென்யமீன் மக்களே, கேளுங்கள்; ஈசாயின் மகன் உங்கள் எல்லோருக்கும் வயல்களையும் திராட்சைத்தோட்டங்களையும் கொடுப்பானோ? உங்களெல்லோரையும் ஆயிரத்திற்கு அதிபதிகளும் நூற்றுக்கு அதிபதிகளுமாக வைப்பானோ?

8. நீங்களெல்லோரும் எனக்கு எதிராக சதி செய்தது என்ன? ஈசாயின் மகனுடனே என் குமாரன் உடன்படிக்கை செய்யும்போது, என் செவிக்கு அதை ஒருவனும் வெளிப்படுத்தவில்லை; எனக்காகப் பரிதாபப்பட்டு, என் செவிக்கு அதை வெளிப்படுத்த உங்களில் ஒருவன் கூட இல்லையா? இந்த நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிசெய்ய, என்னுடைய மகன் என்னுடைய வேலைக்காரனை எனக்கு விரோதமாக தூண்டிவிட்டானே என்றான்.

9. அப்பொழுது சவுலின் ஊழியக்காரர்களோடு நின்ற ஏதோமியனாகிய தோவேக்கு பதிலாக: ஈசாயின் மகனை நோபிலிருக்கிற அகிதூபின் மகனான அகிமெலேக்கிடத்தில் வரக்கண்டேன்.

10. இவன் அவனுக்காகக் யெகோவாவிடத்தில் விசாரித்து, அவனுக்கு வழிக்கு ஆகாரம் கொடுத்து, பெலிஸ்தனாகிய கோலியாத்தின் பட்டயத்தையும் அவனுக்குக் கொடுத்தான் என்றான்.

11. அப்பொழுது ராஜா: அகிதூபின் மகனான அகிமெலேக் என்னும் ஆசாரியனையும், நோபிலிருக்கிற அவன் தகப்பன் வீட்டார்களாகிய எல்லா ஆசாரியர்களையும் அழைத்தான்; அவர்கள் எல்லாரும் ராஜாவினிடத்தில் வந்தார்கள்.

12. அப்பொழுது சவுல்: அகிதூபின் மகனே கேள் என்று சொல்ல, அவன்: இதோ, இருக்கிறேன் என்னுடைய ஆண்டவனே என்றான்.

13. அப்பொழுது சவுல் அவனை நோக்கி: நீயும் ஈசாயின் மகனும் எனக்கு விரோதமாக சதிசெய்து, இந்நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிசெய்ய அவன் எனக்கு எதிராக எழும்பும்படி, நீ அவனுக்கு ரொட்டியும் பட்டயமும் கொடுத்து, தேவசந்நிதியில் அவனுக்காக விசாரித்தது என்ன என்றான்.

14. அகிமெலேக் ராஜாவுக்குப் பதிலாக: உம்முடைய எல்லா ஊழியக்காரர்களிலும் தாவீதைப் போல, ராஜாவுக்கு மருமகனும், உம்முடைய கட்டளைகளின்படி செய்து வருகிறவனும், உம்முடைய வீட்டிலே கனமுள்ளவனுமாயிருக்கிற உண்மையுள்ளவன் யார்?

15. இன்றையதினம் அவனுக்காக தேவனிடத்தில் வேண்டுதல் செய்யத் தொடங்கினேனோ? அது எனக்குத் தூரமாயிருப்பதாக; ராஜா தம்முடைய அடியானாகிய என்மேலாவது என்னுடைய தகப்பன் வீட்டார்களில் எவன் மேலாவது குற்றம் சுமத்தவேண்டாம்; உம்முடைய அடியான் இவைகளிலெல்லாம் ஒரு சிறிய காரியமாகிலும் பெரிய காரியமாகிலும் அறிந்ததில்லை என்றான்.

16. ராஜாவோ: அகிமெலேக்கே, நீயும் உன்னுடைய தகப்பன் வீட்டார்கள் அனைவரும் நிச்சயமாக சாகவேண்டும் என்றான்.

17. பின்பு ராஜா தன்னருகில் நிற்கிற காவலர்களை பார்த்து: நீங்கள் போய், யெகோவாவுடைய ஆசாரியர்களைக் கொல்லுங்கள்; அவர்கள் கையும் தாவீதோடே இருக்கிறது; அவன் ஓடிப்போகிறதை அவர்கள் அறிந்திருந்தும், அதை எனக்கு வெளிப்படுத்தவில்லை என்றான்; ராஜாவின் வேலைக்காரர்களோ, யெகோவாவுடைய ஆசாரியர்களைக் கொல்லத் தங்கள் கைகளை நீட்ட சம்மதிக்கவில்லை.

18. அப்பொழுது ராஜா தோவேக்கை நோக்கி: நீ போய் ஆசாரியர்களைக் கொன்றுபோடு என்றான்; ஏதோமியனாகிய தோவேக்கு ஆசாரியர்கள்மேல் விழுந்து, சணல் நூல் ஏபோத்தை அணிந்திருக்கும் 85 பேரை அன்றையதினம் கொன்றான்.

19. ஆசாரியர்களின் பட்டணமாகிய நோபிலுமுள்ள ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும், கைக் குழந்தைகளையும், மாடுகளையும், கழுதைகளையும், ஆடுகளையும் கூர்மையான பட்டயத்தால் வெட்டிப்போட்டான்.

20. அகிதூபின் மகனான அகிமெலேக்கின் மகன்களில் அபியத்தார் என்னும் பெயருள்ள ஒருவன் தப்பி, தாவீது இருக்கும் இடத்திற்கு ஓடிப்போய்,

21. சவுல் யெகோவாவுடைய ஆசாரியர்களைக் கொன்றுபோட்ட செய்தியை தாவீதுக்கு அறிவித்தான்.

22. அப்பொழுது தாவீது அபியத்தாரைப் பார்த்து: ஏதோமியனாகிய தோவேக்கு அங்கே இருந்ததாலே, அவன் எப்படியாகிலும் சவுலுக்கு அதை அறிவிப்பான் என்று அன்றையதினமே அறிந்திருந்தேன்; உன்னுடைய தகப்பன் வீட்டார்களாகிய எல்லோருடைய மரணத்திற்கும் காரணம் நானே.

23. நீ என்னிடத்தில் இரு, பயப்படவேண்டாம்; என் உயிரை வாங்கத்தேடுகிறவனே உன்னுடைய உயிரையும் வாங்கத்தேடுகிறான்; நீ என்னுடைய ஆதரவிலே இரு என்றான்.