Read Bible
Free to use • No login or registration required • For all ages
Choose your language, version, book, and chapter below. You can optionally pick a single verse for a focused view. Then click Go to see the passage. Need help? See our How to use guide.
1. தாவீது நோபிலிருக்கிற ஆசாரியனாகிய அகிமெலேக்கினிடம் போனான்; அகிமெலேக்கு நடுக்கத்தோடே தாவீதுக்கு எதிர்கொண்டுபோய்: ஒருவரும் உம்மோடு வராமல், நீர் தனித்து வருகிறது என்ன என்று அவனைக் கேட்டான்.
2. தாவீது ஆசாரியனாகிய அகிமெலேக்கைப் பார்த்து: ராஜா எனக்கு ஒரு காரியத்தைக் கட்டளையிட்டு, நான் உன்னை அனுப்பின காரியமும் உனக்குக் கட்டளையிட்டதும் இன்னதென்று ஒருவரும் அறியாதிருக்கவேண்டும் என்று என்னோடே சொன்னார்; குறிப்பிட்ட இடத்திற்கு வரவேண்டும் என்று வாலிபர்களுக்கு சொல்லியிருக்கிறேன்.
3. இப்போதும் உம்முடைய கையில் இருக்கிறது என்ன? ஐந்து அப்பங்களோ, எதாவது, இருக்கிறதை என்னுடைய கையிலே கொடும் என்றான்.
4. ஆசாரியன் தாவீதுக்குப் பதிலாக: பரிசுத்த அப்பம் இருக்கிறதே தவிர, சாதாரண அப்பம் என்னுடைய கையில் இல்லை; வாலிபர் பெண்களோடு மட்டும் சேராமலிருந்தால் கொடுப்பேன் என்றான்.
5. தாவீது ஆசாரியனுக்குப் பதிலாக: நான் புறப்படுகிறதற்கு முன்பு நேற்றும் முந்தையநாளும் பெண்கள் எங்களுக்கு விலகியிருந்தார்கள்; வாலிபர்களுடைய சரீரங்களும் சுத்தமாயிருக்கிறது; இன்றையதினம் வேறே அப்பம் பாத்திரத்தில் பிரதிஷ்டைசெய்யப்பட்டதினால், இது சாதாரணமாயிற்றே என்றான்.
6. அப்பொழுது யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து எடுக்கப்பட்ட சமூகத்தின் அப்பங்களைத்தவிர, வேறு அப்பம் அங்கே இல்லாததால் ஆசாரியன் அவனுக்குப் பரிசுத்த அப்பத்தை கொடுத்தான்; அவைகள் எடுக்கப்படுகிற நாளிலே அதற்குப் பதிலாகச் சூடான அப்பம் வைக்கப்படும்.
7. சவுலுடைய வேலைக்காரர்களில் ஏதோமியனாகிய தோவேக்கு என்னும் பேருள்ள ஒருவன் அன்றையதினம் அங்கே யெகோவாவுடைய சந்நிதியில் தடைபட்டிருந்தான்; அவன் சவுலுடைய மேய்ப்பருக்குத் தலைவனாயிருந்தான்.
8. தாவீது அகிமெலேக்கைப் பார்த்து: இங்கே உம்முடைய வசத்தில் ஒரு ஈட்டியோ, பட்டயமோ இல்லையா? ராஜாவின் காரியம் அவசரமானபடியால், என் பட்டயத்தையோ, என் ஆயுதங்களையோ, நான் எடுத்துக்கொண்டுவரவில்லை என்றான்.
9. அதற்கு ஆசாரியன்: நீர் ஏலே பள்ளத்தாக்கிலே கொன்ற பெலிஸ்தனாகிய கோலியாத்தின் பட்டயம், இதோ, ஏபோத்திற்குப் பின்னாக ஒரு புடவையிலே சுருட்டி வைத்திருக்கிறது; அதை நீர் எடுக்க மனதானால் எடுத்துக்கொண்டுபோம், அதுவே அல்லாமல் வேறொன்றும் இங்கே இல்லை என்றான்; அப்பொழுது தாவீது: அதற்கு நிகரில்லை; அதை எனக்குத் தாரும் என்றான்.
10. அன்றையதினம் தாவீது எழுந்து சவுலுக்குத் தப்பியோடி, காத்தின் ராஜாவாகிய ஆகீசிடத்தில் போனான்.
11. ஆகீசின் ஊழியக்காரர்கள் அவனைப் பார்த்து: தேசத்து ராஜாவாகிய தாவீது இவன் அல்லவோ? “சவுல் கொன்றது 1,000, தாவீது கொன்றது 10,000” என்று இவனைக் குறித்தல்லவோ ஆடல் பாடலோடே கொண்டாடினார்கள் என்றார்கள்.
12. இந்த வார்த்தைகளைத் தாவீது தன் மனதிலே வைத்துக்கொண்டு, காத்தின் ராஜாவாகிய ஆகீசுக்கு மிகவும் பயப்பட்டு,
13. அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தன் செய்கையை வேறுபடுத்தி, அவர்களிடம் பைத்தியக்காரனைப் போலக் காண்பித்து, வாசற்கதவுகளிலே கீறிக்கொண்டிருந்து, தன் வாயிலிருந்து நுரையைத் தன் தாடியில் விழசெய்துக்கொண்டிருந்தான்.
14. அப்பொழுது ஆகீஸ்: தன் ஊழியக்காரர்களை நோக்கி: இதோ, இந்த மனிதன் பைத்தியக்காரன் என்று காண்கிறீர்களே; இவனை நீங்கள் என்னிடத்தில் கொண்டு வந்தது என்ன?
15. எனக்கு முன்பாகப் பைத்திய சேட்டை செய்ய, நீங்கள் இவனைக் கொண்டு வருவதற்கு, பைத்தியக்காரர்கள் எனக்குக் குறைவாயிருக்கிறார்களோ? இவன் என் வீட்டிற்கு வரலாமா என்றான்.